Wednesday, October 14, 2009

முதல்வர் அடிக்கும் அவசர கால அரசியல் கூத்து

இன்றைய தமிழ் செய்தி தொலைக்காட்சிகளில் ஒரு செய்தி ஓடிக்கொண்டு இருக்கிறது. முகாம்களில் உள்ள ஈழத் தமிழர்கள் இன்று முதல் தமது சொந்த இடங்களில் குடியமர்த்தப் படுவார்கள் என்றும் முதல் கட்டமாக 58000 அல்லது 52000 தமிழர்கள் குடியமர்த்தப் படுவதாகவும் முதல்வர் கருணாநிதி அறிவித்து இருக்கிறார். நேற்றைய இந்தியன் எக்ஸ்பிரஸ் இல் ராஜபக்சே கண்ணிவெடிகளை அகற்றும் வரை மக்கள் முகாம்களை விட்டு அனுப்பப் போவதில்லை எனவும் முகாம்களின் நிலை தரம் உயர்த்தப் படும் என்று தெரிவித்து இருந்தார். தமிழ் எம் பிக்கள் வரும் போது மனக் குறையோடு வந்ததாகவும் திரும்பும் போதே மன நிறைவுடன் திரும்பியதாகவும் ஒரு இலங்கை அரசு அதிகாரி தெரிவித்து உள்ளார் . இலங்கை என்ன தமிழ்நாடா? முதல்வர் வழக்கம் போல தன்னிஷ்டப்படி அறிவிப்புகள் செய்கிறார். இந்த பத்து எம் பி களின் நற்சான்றிதல்களை ஐ நா சபையிடம் ராஜபக்சே காண்பிப்பார் என விஜயகாந்த் சொன்னதுதான் நடக்கும் போல தெரிகிறது. உலகத் தமிழ் மாநாடு நடத்த தனக்கு தகுதி இருக்கிறது என்று காட்டிக்கொள்ள முதல்வர் அடிக்கும் இந்த அவசர கால அரசியல் கூத்து மிகவும் வேதனை அளிக்கிறது. திருமாவளவன் மீண்டும் மீண்டும் தன்னையே கேவலப் படுத்திக் கொள்கிறார்.

Friday, October 2, 2009

சாதியும் சாதி நிமித்தமுமாய்.......

சாதீய மனப்பான்மை வளர்ந்து கொண்டு போகிறதே ஒழிய குறைந்த பாடில்லை. வெறும் மனதுக்குள் மட்டும் சாதி இல்லை. பல வடிவங்களில் அது அதன் கோர முகத்தை காட்டி வருகிறது. சாதிய அடக்கு முறை என்பது மேல் சாதி இடைசாதியினர் மட்டும் செய்வது இல்லை. பெரும்பான்மையாக உள்ள தாழ்த்தப்பட்டவர்கள் என்று அரசிடம் சான்றிதழ் வாங்கியவர்கள் கூட- ஆதிதிராவிடர் பள்ளர் பறையர் முதலானோர் சக்கிலியரை அடக்கி வைக்கிறதை பார்த்து உள்ளேன். சமீபத்தில் பெருமாள் முருகனிடம் பேசியபோதும் இது சம்பந்தமாக பேசியபோது ஒரு தகவல் சொன்னார். பாமா தலித் மக்களின் வாழ்வை பதிவு செய்கிற நாவலில் அல்லது நாவல்களில் அருந்ததியரை அவன் இவன் எனவும் வேறு சாதியினரை மரியாதையாகவும் குறிப்பிட்டுள்ளதாக சொன்னார். கரூர் மாவட்டம் புலியூர் வட்டாரம் மற்றும் திருச்சி மாவட்டம் தொட்டியம் வட்டாரம் இந்த இரண்டும் சிறுவயதில் இருந்தே எனக்கு தெரிந்த பகுதிகள். நான் பிறந்து படித்து வளர்ந்த இடங்கள். இங்கே சக்கிலியர்கள் மிகவும் கீழான நிலையில் உள்ளனர். என் கிராமத்தில் நிலம் வைத்து விவசாயம் செய்கிற பள்ளர் இன மக்கள் நிலம் இல்லாத கூலிகளான பறையர் இன மக்களை கீழாக மதிப்பதையும் பார்த்து வளர்ந்துள்ளேன்.

எனது ஊரில் இந்த இரண்டு இன மக்களையும் உறவு முறை சொல்லி அழைத்து பழகினாலும் வீட்டுக்குள் அழைத்து வருவதோ அவர்களும் வர நினைப்பதோ இல்லை. எங்கள் வீட்டு விசேசங்களுக்கு அவர்கள் வருவார்கள். அவர்களது விசேசங்களுக்கு இந்த மக்களும் போவது உண்டு. ஆனால் சாப்பிடுவதில்லை. போகப் போக இந்த கொஞ்ச நஞ்ச வித்யாசமும் மறைந்து விட வேண்டும் என விரும்புகிறேன். பறத் தெரு பள்ளத் தெரு என்று சொன்ன மக்கள் இப்போது ரோஜா நகர் முல்லை நகர் என சொல்கிறார்கள். அரசுப் பதிவுகளிலும் மாறி விட்டது. இதெல்லாம் வரவேற்க வேண்டிய அம்சங்கள்.

எல்லோருக்கும் ஓரளவு பொருளாதார நிறைவு அல்லது சமத்துவம் வரும்போது சாதி என்பது அவசியமாக இருக்காது. அப்போது கண்டிப்பாக சாதி மறக்கப் படும் ஒழிந்து போகும். அந்த அடிப்படையிலேயே பெரியார் தன சமூகப் புரட்சியினை வழிநடத்தினார். சாதியக் கட்டுமானங்களை தகர்க்க அவர் கடவுளை முதலில் தகர்க்க வேண்டி இருந்தது. அதனால் கடவுள் இல்லை என்றார். கடவுளை கட்டிக் காப்பது பார்ப்பன சாதி. எனவே அந்த சாதியை விரோதிகளாக பிரகடப்படுத்தி போராடினார். ஆனால் காலப் போக்கில் பெரியார் எந்த நோக்கத்திற்காக இந்த இரண்டு விசயங்களையும் தொடங்கினாரோ அதை மறந்து விட்டு கடவுள் இல்லை என்பதையும் பார்ப்பானை திட்டுவதையுமே பெரியாரியல் என்று பலரும் நினைக்கிறார்கள். நமது சமுகத்தில் பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் இருக்கும் வரை சாதி இருக்கும். இன்று நகரங்களில் வாழும் வசதியான தாழ்த்தப்பட்ட மக்களோடு இடைசாதியினரும் தெரிந்தோ தெரியாமலோ விரும்பியோ விரும்பாமலோ பிள்ளைகளின் விருப்பத்தின் பேராலோ திருமண பந்தம் வைத்துக் கொள்கிறார்கள். இந்த நிலை கிராமங்களில் வர வெகு காலமாகும். எனது கிராமத்தில் தாழ்த்தப்பட்ட மக்களிடம் கடன் வாங்கும் குடியானவர்கள் உண்டு. குடியானர்வளின் நிலங்களை தாழ்த்தப்பட்டோர் வாங்குவதும் நடக்கிறது. மாற்றங்கள் கண்டிப்பாக நடக்கும். ஆனால் மெதுவாக நடக்கும் என்றே படுகிறது. அதுவரை செத்துப் போன பாரதியிடம் வீரம் காட்டாமல் உருப்படியாக ஏதாவது செய்தால் நல்லது நடக்கும்.

Tuesday, September 29, 2009

நான்கு வழிச்சாலைகள்


இடம் : சித்தலவாய்

இப்போதெல்லாம் நாட்டின் பல இடங்களில் சாலை போட்டுக்கொண்டும் இருக்கின்ற சாலைகளை அகலப்படுத்தியும் வருகிறார்கள். சாலைகள் மேம்பாடு தேவையான ஒன்றுதான். ஆனாலும் இது போன்ற திட்டங்களினால் வயதான மரங்கள் பழைமையான கட்டடங்கள் எளிய மக்களின் குடியிருப்புகள் அழிக்கப்படுகின்றன. சில மாதங்கள் முன்பு திருச்சி கரூர் சாலையில் போன பொது இந்த படங்களை எடுத்தேன். அந்த சாலை நெடுகிலும் நான்கு வழிச்சாலைகள் பணிக்காக மரங்களும் வீடுகளும் அகற்றப்பட்டு வருகின்றன. போர் நடக்கும் பகுதி போல உள்ளது. மிகவும் வருத்தமான விஷயம் தான் என்றாலும் முன்னேற்றப் பணிகளுக்காக சிலவற்றை விட்டுக் கொடுத்துதான் ஆகவேண்டும்.

Monday, September 28, 2009

வேடிக்கை பார்த்தவன்

இங்கே எழுதி ரொம்ப நாள் ஆகிவிட்டது. வெறும் எழுத்து என்ன செய்துவிட முடியும் என்ற அவநம்பிக்கை தான் அதற்கு காரணம். ஈழத்தில் என் சகோதரர்கள் சாவுடன் போராடியபோது இங்கே நான் என் வேலைக்காக போராடினேன். அவர்களுக்காக எதுவும் செய்யத்துணியாமல் செய்திகளை கேட்டுக் கொண்டிருந்தேன். மிகப்பல காலமாக என்னுள் ஒரு கனவு இருந்தது. மலரும் தமிழ் ஈழத்தில் ஒரு எளிய ஆசிரியராக கொஞ்ச காலமேனும் வேலை செய்ய வேண்டும் என்று. இப்போது மலரும் தமிழ் ஈழத்தில் கால் வைக்க எனக்கு அருகதை உள்ளதா என் தெரியவில்லை. என்றாலும் தமிழ் ஈழம் மலரட்டும். என் மக்கள் அங்கே சமாதானத்துடனும் சுதந்திரத்துடனும் மகிழ்வாய் வாழட்டும் .

Saturday, July 4, 2009

உயிரும் மனமும்

மனம் என்பது ஒரு இயங்கு நிலை. அது தனிப்பட்ட உறுப்பு அல்ல. அது மூளையை இயக்குகிறது.இந்த உடல் இயங்குகிறது என்றால் அது உயிர் என்ற சக்தி இருக்கும் வரைதான். இதில் மனம் என்பதும் ஆன்மா என்பதும் ஒன்றே. இந்த பிரபஞ்சத்தில் எல்லா அணுக்களையும் இயக்குகிற ஆதார சக்தி எதுவோ அதுதான் நமது உயிரும். விந்தணுவும் அண்டமும் கருவுறும் பொது அந்த சக்தி உயிராய் கருவில் அமர்கிறது . அதுவே உடல் என்னும் இயந்திரக் கலவை இயங்க எரிபொருளாக உள்ளது. உடல் இயங்க முடியாத நிலை வரும் பொது அந்த சக்தி உடலிலிருந்து பிரிந்து பிரபஞ்சத்தின் ஆதாரப் பொருட்களோடு இணைக்கிறது அல்லது வேறு ஒரு உயிராக பிறப்பு எடுக்கிறது.

இதுவரையில் எனது புரிதல் இதுவாக இருந்தது. கடந்த மாதம் ரயிலில் ஒருவரிடம் பேசிய பொது அவர் வேறு மாதிரி சொன்னார். விந்தணு ஆணில் உற்பத்தியாகும் போதே ஆன்மா அங்கே குடியேருகிரது. அதுதான் பின் இயக்குகிறது என்றார். அவரின் கருத்துப் படி நமது ஆன்மா ஒன்று அல்ல . அது பல உயிர்களது ஆன்மாக்களின் கலவை. அதனால் தான் ஒவ்வொருவரின் குணாதிசயமும் மாறுபடுகிறது. ஒரு சமயம் நல்லவனா போலவும் மறு சமயம் கெட்டவன் போலவும் . அவர் சொன்னதும் யோசிக்க வேண்டியது.

நான் சொன்ன விசயங்கள் இரண்டு. ஒன்று எனது புரிதல் இன்னொன்று ஒரு ரயில் நண்பர் சொன்னது. இரண்டும் உண்மை என்று சொல்லவில்லை. யோசிக்க வேண்டியது. இது தொடர்பாக இன்னும் அறிவியல் உலகமே முழு தீர்மானத்திற்கு வரவில்லை. இதன் மீதான ஆய்வுகளும் குறைவு.

ஆன்மா என்பது என்னை பொறுத்துவரை நமது சிந்தனை. அதை மனம் என்றும் சொல்லலாம். அது தான் மூளையை இயக்கு கிறது.

கருவுறுதல் என்பது இரண்டு இருபத்து மூன்று குரோமோசோம்கள் உள்ள பாளினசெல்கள் இணைந்து ஒரு நாற்பத்து ஆறு குரோமோசோம் உள்ள செல்லாக மாறுவது . அது தான் கரு. இந்த கருதான் முழு மாநிதனாக வளர முடியும். விந்து அண்டம் இரண்டும் உயிருள்ள செல்கள் தான். மனித உடலில் நகம் முடி எலும்பு இன்னும் வெகு சிலவற்றை தவிர மற்ற எல்லலாமே உயிருள்ளது தான். அறிவியல் கோட்பாடுகளின் படி எந்த செல்லையும் எடுத்து ஒரு முழு உயிரியை உருவாக்கி விட முடியும்.

எல்லா வகையான மரண காரணிகளும் ஏற்படுத்தும் இறுதி விளைவு மூளை தனது வேலேயை நிறுத்துவது தான். முளை செத்த பின்னும் கொஞ்ச காலம் இந்த உறுப்புகள் இயங்கலாம். ஆனால் அந்த உடல் அதன் பிறகு உயிர் இல்லை என்றுதான் கருதப் படுகிறது. இந்த இதயம் மற்ற உறுப்புகள் எல்லாம் ஒரு இயந்திரம் போல. இவை எல்லாவற்றுக்கும் சாவி மூளைதான். அதன் செயல்பாட்டை நான் மனம் என்கிறேன். சிந்தனை என்றும் சொல்லலாம். ஆனால் இதற்கும் நமது உடலை அது இயக்குவதற்கும் சம்பந்தம் இல்லை. வாதம் வந்தவர்கள் உறுப்புகள் இயங்காவிட்டாலும் சிந்தனை குறைவு துளியும் இல்லை. நமது உடலை முளை இயக்கம் விதம் நன்றாக ஆராயப் பட்டுள்ளது. அதற்கும் சிந்தனைக்கும் மனதிற்கும் சம்பந்தம் இஉல்லை. உடல் இயக்கம் என்பது தன்னிச்சையாய் நிகழ்வது. ஆனால் சிந்தனையை நாம் கட்டுப்படுத்தலாம். அதுதான் அந்த கட்டுப்பட்ட சிந்தனைதான் அல்லது சிந்தனையை கட்டுப்படுத்தும் மூளையின் செயல்பாடுதான் மனம்.

இந்த ஒட்டு மொத்த பிரபஞ்ச இயக்கம் மனித உயிர் உள்பட புறத்தில் இருந்து பெறப்பட்ட சக்தியால் தான் இயக்கப் படுகிறது. ஒரு கரு உருவாகும் பொது என்னென நிகழ்வுகள் நடைபெறுகின்றன என்பது ஒன்பதாம் வகுப்பு பாடப் புத்தகங்களில் கூட உள்ளது. ஆனால் அந்த நிகழ்வுகளை தூண்டும் சக்தி அல்லது காரணி என்னவென்பதை இன்னும் முழுதாக மனிதகுலம் அறிந்த பாடில்லை. இந்த மதங்கள் சொல்கிற பரம்பொருளை இயற்பியல்வாதிகள் சொல்கிற கருந்துளையுடன் நான் ஒப்பிடுவீன். இந்த பிரபஞ்சத்தில் சக்க்தி உருவாகவும் இல்லை அழிவதும் இல்லை. ஒரு ஆற்றல் இன்னொரு ஆற்றலான்\க பரிணாமம் பெறுகிறது. இதைதான் நான் மறு பிறப்பு என கொள்கிறேன். இதற்காக நான் வேத சாஸ்திர அபிமானி என என்ன வேண்டாம். அறிவியல் புலத்தில்; முனைவர் பட்டம் வரை பெற்று உள்ள எனது எனது அறிவு இதை ஏற்றுக் கொள்கிறது.

அறிவியல் உலகம் எதிர்மறை ஆய்வுகளையும் ஒத்துக் கொள்கிறது. ஆனால் நமது முன்னோர்கள் உணர்ந்த எழுதியவற்றை புரட்டு என ஆய்வு செய்யாமலே ஒதுக்குவதில் பெருமிதம் கொள்கிறது.

உலகம் தட்டை என்றபோதும் அது ஒரு அறிவியல் கருத்து. உலகம் உருண்டை என்றானபோதும் அது அறிவியல் கருத்து.

செவ்வாய் என்று சோதிடம் சொன்னால் புரட்டு. என்னை பொறுத்தவரை உண்மை இல்லாமை எந்த ஒரு கருத்தையும் உருவாக்க முடியாது. ஆன்மா என்ற ஒன்று இல்லை என்று இதுவரை யாரும் நிரூபித்து காட்டவில்லை. நமது அறிவியல் ஐரோப்பிய வளர்ச்சியோடு இணைந்தது. அதன் வயது ரொம்ம குறைவு. ஆனால் நம் இந்திய மரபு சார் சிந்தனைகள் மிகப் பழையன. முறையாக ஆய்வு செய்தால் நிறைய உண்மைகள் புலனாகும்.

ந்த ஒன்று இயங்குவதற்கும் அடிப்படையாக ஒரு சக்தி அல்லது ஆற்றல் தேவை. எளிதாக் சொன்னால் எரிபொருள். பள்ளத்தில் உருளும் பந்தில் கூட potential energy இறுக்க வேண்டும். இல்லாவிட்டால் உருளாது. இது ஆறாம் வகுப்பு இயற்பியல். உடலின் இயக்கம் உயிர். அதாவது உடலின் இயக்கங்களை இயக்குவது உயிர்.

ந்திய சிந்தனை மரபின் (இந்து மரபு என்று கொள்ள வேண்டாம். அது வேறு வகையில் விவாதிக்க சொல்லும். அது எனக்கு ஏற்புடையது அல்ல ) படியும் நான் ஏற்றுக் கொண்ட வரையிலும் ஆன்மா பிரிந்து வேருரோ உடலில் உயிரை உருவாக்கும். அல்லது பிரபஞ்ச பரம்பொருளுடன் இணையும் . அறிவியல் உலகம் விவாதிக்கிற கருந்துளை ஆகா கூட இது இருக்கலாம். நீங்கள் தொலைக்காட்சி பெட்டியை அணைத்தால் உங்களுக்கு மட்டும் தான் காட்சிகள் மறையும். உலகில் எத்தனை பெட்டிகள் உள்ளன?
அதுபோல உலகில் பல உயிர்கள் உள்ளன. இந்த ஆன்மா என்பதை மீண்டும் சொல்கிறேன் அது ஒரு வகை சக்தி. ஆற்றல். உடலில் இருந்து பிரிந்தால் அது வேறு ஏதாவது உயிரினத்தின் இயங்கு சக்தியாக இருக்கலாம். அல்லது ஒரு நிக்கல் கட்மியம் பேட்டரியில் மின்சாரமாக போகலாம். ஒரு உயிரில் இருந்து பிரிந்த ஆன்மா இன்னொரு உயிரில் தான் சேர வேண்டும் என்பது இல்லை. ஏதாவது உயிரற்ற பொருளிலும் ஆற்றலாக சேரலாம். இந்த பிரபஞ்சத்தின் எல்லா உயிருள்ள உயிரற்ற பொருட்களும் பிரபஞ்சத்தின் அங்கம். அதற்கு ஒரே ஒரு ஆதார சக்திதான். அது தான் சூரியனையும் இயக்குகிறது. உங்களையும் இயக்குகிறது. காற்றில் குப்பையையும் பறக்க வைக்கிறது. இது அறிவியல் பூர்வமான உண்மை

மொத்தத்தில் உயிர் என்பதும் உண்டு. மனம் அல்லது ஆன்மா என்பதும் உண்டு. இதை இரண்டையும் அறிவியல் உலகம் இன்னும் ஆராய்ந்து முடிக்கவில்லை. அதனால் அது இல்லை என்று முடிவாகிவிடவில்லை. நமது மனித குளத்தின் தற்போதைய அறிவு வளர்ச்சி அதயு ஆராயும் அளவு இன்னும் வளரவில்லை.